திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது


திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது
x
தினத்தந்தி 9 Aug 2018 11:40 PM GMT (Updated: 9 Aug 2018 11:40 PM GMT)

தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி, 


தாளவாடி அருகே திம்பம் மலைப்பகுதி உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த பாதை வழியாக தினமும் கார், பஸ், லாரி என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் திம்பம் மலைப்பாதை தமிழக-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக உள்ளது.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணி அளவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டு இருந்தது. தாளவாடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் 24-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, டீசல் இல்லாததால் லாரி அப்படியே நின்றுவிட்டது.

இதைத்தொடர்ந்து லாரியில் உள்ள டீசல் டேங்கரில் டீசல் நிரப்பிய பின்னரும் பழுது ஏற்பட்டதால், லாரியை டிரைவரால் மேற்கொண்டு இயக்க முடியவில்லை. இதனால் அந்த வழியாக வந்த கார், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அணிவகுத்து ஒன்றபின் ஒன்றாக நின்றுவிட்டன.
2 சக்கர வாகனங்கள் மட்டுமே சென்றன. மேலும், தமிழகத்தில் இருந்து வந்த வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், கர்நாடகத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் ஆசனூரில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, பழுதாகி நின்ற லாரியை ரோட்டின் ஓரமாக இழுத்து நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பகல் 11 மணி அளவில் லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்லத்தொடங்கின. மேலும் பழுதாகி நின்ற லாரி சரிசெய்யப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு பொள்ளாச்சிக்கு சென்று விட்டது. திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். 

Next Story