கருணாநிதி மறைவையொட்டி மவுன ஊர்வலம் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி


கருணாநிதி மறைவையொட்டி மவுன ஊர்வலம் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 10 Aug 2018 10:45 PM GMT (Updated: 10 Aug 2018 6:34 PM GMT)

கருணாநிதி மறைவையொட்டி தர்மபுரியில் நேற்று மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு அவருடைய உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

தர்மபுரி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 7-ந்தேதி மரணமடைந்தார். அவருடைய மறைவிற்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற மவுன ஊர்வலம் தொடங்கியது.

இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்ட துணைசெயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட பொருளாளர் தர்மச் செல்வன், மாநில நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக தர்மபுரி 4-ரோட்டை வந்தடைந்தது.

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் நகர செயலாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம், கோபால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோகரன், வேடம்மாள், வெங்கடாசலம், வக்கீல் அணி மாவட்ட நிர்வாகி மணி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோன்று தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், நகரதலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர்கள் காமராஜ், பிரகாசம், விஸ்வநாதன், வஜ்ஜிரம், பூபதி ராஜா, சண்முகம், சரணவன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story