பர்கூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் செத்தன


பர்கூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 10 Aug 2018 10:30 PM GMT (Updated: 10 Aug 2018 6:43 PM GMT)

பர்கூர் அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் செத்தன. சிறுத்தைப்புலி நடமாட்டம் அந்த பகுதியில் உள்ளதா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் முச்சானிமேடு அருகில் உள்ள நல்லப்ப நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் வசிப்பவர் சென்னையன் (வயது 67). இவர் தனது வீட்டின் அருகில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு பட்டியில் அடைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சென்று பார்த்த போது பட்டியில் இருந்த தடுப்பு வேலிகள் உடைக்கப்பட்டு 3 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மேலும் ஒரு ஆட்டை காணவில்லை. இறந்த ஆட்டின் வயிறு, நெஞ்சுப்பகுதி ஆகியவற்றில் மர்ம விலங்குகள் கடித்து கொன்றிருப்பது தெரிய வந்தது.

இதே போல் சென்ற மாதம் வளையல்காரன்கொட்டாயில் நவநீதா என்பவரின் 4 ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மர்ம விலங்கின் கால்தடங்களை வைத்து இவை சிறுத்தைப்புலியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து ஆடுகளை மர்மவிலங்கு கடித்து கொன்று வருவதால் அந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story