திருமருகல் அருகே வளப்பாற்றில் படுக்கை அணை கட்டப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு


திருமருகல் அருகே வளப்பாற்றில் படுக்கை அணை கட்டப்படுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 11:00 PM GMT (Updated: 10 Aug 2018 6:51 PM GMT)

திருமருகல் அருகே வளப்பாற்றில் படுக்கை அணை கட்டப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பெரியகண்ணமங்கலம், குரும்பேரி, சின்ன கண்ணமங்கலம், கொட்டாரக்குடி, பெருஞ்சாத்தாங்குடி, கரம்பை ஆகிய பகுதிகளில் வளப்பாற்றின் மூலம் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. இந்த பகுதியில் ஆற்றில் இருந்து சாகுபடி செய்ய போதுமான தண்ணீர் கிடைப்பது இல்லை என அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் தற்போது கடைமடை பகுதிக்கு திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் வளப்பாற்றில் போதுமானதாக இல்லை எனவும், இதனால் சாகுபடி செய்ய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் கிடைக்க வில்லை என்பதால் பெரியகண்ணமங்கலத்தில் வளப்பாற்றில் ஒரு படுக்கை அணை அமைத்து தரவேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக அப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறையினர் அப்பகுதி வடிகால்களை தூர்வாரி வரும் பெரியகண்ணமங்கலம் வளப்பாற்றில் ஒரு படுக்கை அணை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா? என அந்த பகுதி விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story