ஸ்ரீபெரும்புதூரில் தொழில் அதிபரை கடத்திச்சென்ற கார் விபத்தில் சிக்கியதால் மீட்கப்பட்டார்


ஸ்ரீபெரும்புதூரில் தொழில் அதிபரை கடத்திச்சென்ற கார் விபத்தில் சிக்கியதால் மீட்கப்பட்டார்
x
தினத்தந்தி 10 Aug 2018 9:45 PM GMT (Updated: 10 Aug 2018 8:07 PM GMT)

ஸ்ரீபெரும்புதூரில் காரில் சென்ற தொழில் அதிபர் கடத்தப்பட்டார். அந்த கார் விபத்தில் சிக்கியதால் பொதுமக்கள் அவரை மீட்டனர். அவர் வைத்திருந்த ரூ.4.40 லட்சமும் தப்பியது.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 52). சமையல் எரிவாயு ஏஜென்சி நடத்திவரும் இவர் நேற்று பணி நிமித்தமாக ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்துடன் அவரது காரில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது சிலர் இளங்கோவன் சென்ற காரை வழிமறித்து நிறுத்தினர்.

காரை நிறுத்திய இளங்கோவனை அதே காரில் அவர்கள் கத்திமுனையில் கடத்திக்கொண்டு ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புரம் வழியாக சென்றனர். வளர்புரம் அருகே சாலை பணி நடைபெற்றுவருவதால் வேகமாக சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

கார் விபத்தில் சிக்கியவுடன் இளங்கோவனை கடத்திய நபர்கள் காரில் இருந்து வெளியேறி தப்பி ஓடிவிட்டனர். விபத்தை பார்த்த சாலை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து காரில் படுகாயத்துடன் இருந்த இளங்கோவனை மீட்டனர். தொழிலாளர்கள் தப்பியோடிய மர்மநபர்களை விரட்டிச்சென்று ஒருவனை மடக்கிப்பிடித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்துவந்து காயமடைந்த இளங்கோவனை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் திருவள்ளூர் பெரியகுளம் தெருவை சேர்ந்த குணா (19) என்பது தெரியவந்தது.

இளங்கோவனின் சமையல் எரிவாயு கம்பெனியில் வேலை செய்தபோது ஏற்பட்ட தகராறு காரணமாக தொடுகாடு பாலு, திருவள்ளூர் சேட்டு ஆகிய இருவரும் வேலையிலிருந்து நின்றுவிட்டனர். இந்த முன்விரோதத்தில் பணத்துடன் சென்ற இளங்கோவனை கடத்தி பணத்தை பறிக்க முயற்சி செய்ததாகவும், அப்போது கார் விபத்துக்குள்ளானதால் மற்ற 4 பேரும் தப்பி ஓடிவிட்டதாகவும் குணா விசாரணையில் தெரிவித்தார். விபத்துக்குள்ளானதால் பணமும் தப்பியது.

ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய பாலு, சேட்டு உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர். குணாவை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கடத்தல் சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story