பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு: ஆய்வின்போது அமைச்சர் கந்தசாமி அதிரடி


பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு: ஆய்வின்போது அமைச்சர் கந்தசாமி அதிரடி
x
தினத்தந்தி 10 Aug 2018 11:15 PM GMT (Updated: 10 Aug 2018 9:08 PM GMT)

50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுவையில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் அவற்றின் பயன்பாடு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள கடைகளில் அமைச்சர் கந்தசாமி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது சுமார் 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இத்தகைய பைகள் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சில தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி நேற்று அதிகாரிகளுடன் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் அரசு செயலாளர்கள் ஜவகர், பார்த்திபன், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுதாகர், சுற்றுச்சூழல் என்ஜினீயர் ரமேஷ் ஆகியோரும் சென்று இருந்தனர். அவர்கள் ஆய்வு மேற்கொண்ட தொழிற்சாலை உரிமம் இல்லாமல் செயல்படுவதும் அங்கு 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யப்படுவதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்க அமைச்சர் கந்தசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த தொழிற்சாலைக்கு உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி சீல் வைத்தார். மற்றொரு தொழிற்சாலையில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன்பின் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்கவோ கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி இத்தகைய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து உரிமம் இன்றி செயல்பட்ட ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல தொழிற்சாலைகள் உரிமம் பெறாமல் இயங்குவது தெரியவந்துள்ளது. அந்த தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்த அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவினர் முழுமையான ஆய்வு நடத்த உள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார். 

Next Story