விபத்தில் கணவன்- மனைவி சாவு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.4 கோடி இழப்பீடு, ஈரோடு கோர்ட்டு உத்தரவு


விபத்தில் கணவன்- மனைவி சாவு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.4 கோடி இழப்பீடு, ஈரோடு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Aug 2018 10:30 PM GMT (Updated: 10 Aug 2018 9:20 PM GMT)

விபத்தில் கணவன்- மனைவி இறந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரோடு கோர்ட்டு உத்தரவிட்டது.

ஈரோடு,

சேலம் உடையப்பர் காலனியை சேர்ந்தவர் மனோஜ் ஜெயின் (வயது 39). இவர் டெல்லியில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சவிதா (32). இவர்களுக்கு சித்தார்த் (9), மனோ (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி மனோஜ் ஜெயின் தனது மனைவி, மகன்களுடன் டெல்லிக்கு விமானத்தில் செல்ல பெங்களூரு விமான நிலையத்திற்கு சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அந்த கார் தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிபட்டணம்பிரிவு பகுதியில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்துகொண்டு இருந்த சரக்கு வேன் ஒன்று வலதுபுறமாக திரும்பியபோது மனோஜ் ஜெயின் சென்ற கார் மீது மோதியது.

இந்த விபத்தில் மனோஜ் ஜெயின், அவருடைய மனைவி சவிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும், சித்தார்த், மனோ ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவேரிபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் விபத்தில் இறந்த மனோஜ் ஜெயினின் தந்தை மங்கில்லாள், தாய் சகுந்தலாதேவி, மகன்கள் சித்தார்த், மனோ ஆகியோர் தங்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஈரோடு மாவட்ட 2-ம் கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், ‘மனோஜ் ஜெயினின்’ மரணத்திற்கு இழப்பீடாக ரூ.3 கோடியே 59 லட்சத்து 52 ஆயிரத்து 600, சவிதாவின் மரணத்திற்கு இழப்பீடாக ரூ.32 லட்சத்து 37 ஆயிரம், படுகாயம் அடைந்த சித்தார்த், மனோ ஆகியோருக்கு இழப்பீடாக தலா ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் என மொத்தம் ரூ.3 கோடியே 95 லட்சத்து 49 ஆயிரத்து 600 இழப்பீட்டு தொகையாக அவர்களுடைய குடும்பத்தினருக்கு காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஆஜரான வக்கீல்கள் செந்தில்குமார், சங்கீதா ஆகியோர் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக அதிகபட்ச தொகையான சுமார் ரூ.4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது”, என்றனர். 

Next Story