மோட்டார் சைக்கிளில் வந்த கணவன்-மனைவியை தாக்கி நகை பறிப்பு


மோட்டார் சைக்கிளில் வந்த கணவன்-மனைவியை தாக்கி நகை பறிப்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 10:17 PM GMT (Updated: 10 Aug 2018 10:17 PM GMT)

காரைக்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்த தனியார் பள்ளி ஊழியரையும் அவரது மனைவியையும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் தாக்கி நகையை பறித்துச் சென்றது.

காரைக்குடி,

காரைக்குடியை சேர்ந்தவர் குமாரவேல் (வயது43). இவர் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எழுத்தராக உள்ளார். இவர் மனைவி உமாமகேஸ்வரியுடன் அதே பகுதியில் உள்ள மைத்துனர் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கிருந்து இரவு 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். திருச்சி புறவழிச்சாலை ஹவுசிங் போர்டு பகுதியில் வந்தபோது இவர்களுக்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்துள்ளனர்.

திடீரென அவர்கள் கணவன்-மனைவியை மோட்டார் சைக்கிளில் வந்தபடியே எட்டி உதைத்துள்ளனர். இதில் இருவரும் கீழே விழுந்துவிட்ட நிலையில் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். நிலைகுலைந்து போன நிலையில் உமா மகேஸ்வரி கழுத்தில் கிடந்த 2 செயினையும் பறித்துள்ளனர்.

இதில் தாலி செயின் அறுந்து கீழே விழுந்து விட்டது. கையில் கிடைத்த 3½ பவுன் நகையை மட்டும் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் என மறைந்து விட்டனர். படுகாயம் அடைந்த இருவரும் வடக்கு போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி புறவழிச்சாலையில் கடந்த 6 மாதமாக ஒரே மோட்டார்சைக்கிளில் வந்து நகையை பறிக்கும் கும்பலின் அட்டகாசம் உள்ளது. இந்த பகுதியில் தொடரும் இந்த சம்பவங்களால் பகலில் கூட பெண்கள் அந்த வழியாக செல்ல அஞ்சும் நிலை உள்ளது. எனவே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இந்த கும்பலின் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story