இந்து அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது : பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல்


இந்து அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது : பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Aug 2018 11:35 PM GMT (Updated: 10 Aug 2018 11:35 PM GMT)

மும்பை, புனேயில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய இந்து அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது. மேலும் பயங்கர வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மும்பை,

நாட்டின் நிதிநகரமான மும்பை பெருநகரம் பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலக்காகி இருக்கிறது. தொடர்ந்து பயங்கரவாதிகளின் கழுகு கண் பார்வையில் மும்பை இருந்து வருகிறது.

இந்தநிலையில், பால்கர் மாவட்டம் நாலச்ேசாப்ரா மேற்கில் உள்ள பண்டார் அலி பகுதியை சேர்ந்த சிலர் மும்பை மற்றும் புனே நகரங்களில் வெடிகுண்டு தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி வருவதாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலை தொடர்ந்து, நேற்று முன்தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் பண்டார் அலி பகுதிக்கு விரைந்தனர். அந்த பகுதியை சேர்ந்த இந்து அமைப்பின் பிரமுகரான வைபவ் ராவுத் (வயது40) என்பவரது வீடு மற்றும் கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது அங்கு நாசவேலைக்கு பயன்படுத்தப்படும் பயங்கர வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 20 நாட்டு வெடிகுண்டுகள், 2 ஜெலட்டின் குச்சிகள், 4 எலக்ட்ரானிக், 22 எலக்ட்ரானிக் அல்லாத டெ்டனேட்டர்கள், 150 கிராம் வெடிபொருள், பேட்டரிகள், 2 பாட்டில் விஷம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் வெடிகுண்டுகளை கையாளுவது தொடர்பான தகவல்கள் அடங்கிய குறிப்புகளும் சிக்கின.

அந்த வெடிபொருட்களை போலீசார் துணி மூட்டை மற்றும் சாக்குப்பையில் கட்டி வெளியே கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக வைபவ் ராவுத்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய இந்து அமைப்பு பிரமுகர்களான அதே பகுதியை சேர்ந்த சரத் கலாஸ்கர் (25), புனேயை சேர்ந்த சுதன்வா கோந்தலேகர் (39) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

பின்னர் 3 பேரும் விசாரணைக்காக மும்பை அழைத்து வரப்பட்டனர்.

நேற்று அவர்கள் செசன்ஸ் கோர்ட்டில் கூடுதல் நீதிபதி சமீர் அத்கர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, எங்கிருந்து வெடி பொருட்களை வாங்கி வந்தார்கள்? எதற்காக வெடிகுண்டுகள் தயார் செய்தனர்? ெவடிகுண்டுகளை கையாளுவதற்கு எங்கு பயிற்சி பெற்றனர்? அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிய தீவிரவாத தடுப்பு படை போலீஸ் தரப்பில் 15 நாள் காவலில் எடுக்க அனுமதி கோரப்பட்டது.

நீதிபதி அவர்களை வருகிற 18-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிட்டார்.

இதுபற்றி மாநில பயங்கரவாத தடுப்பு படை தலைவர் அதுல்சந்திர குல்கர்ணி கூறுகையில், ‘மராட்டியத்தில் மும்பை, புனேயில் நாசவேலையை அரங்கேற்ற சிலர் திட்டமிட்டு உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரிலேயே சோதனை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அதிகளவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும். பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைகள் தொடர்பாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்’ என்றார்.

கைதானவர்களில் வைபவ் ராவுத் ‘இந்து கோவன்ஸ் ரக்‌ஷா சமிதி' என்ற அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார். அவரை பற்றி இந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பை சேர்ந்த சுனில் கான்வாத் என்பவர் கூறுகையில், “வைபவ் ராவுத் தைரியமான பசு பாதுகாவலர். இந்து கோவான்ஸ் ரக்‌ஷா சமிதி அமைப்பின் மூலம் தீவிரமாக செயல்பட்டார். அவர் பசுக்களை பாதுகாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இந்து அமைப்புகளை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற நோக்குடன் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வார். கடந்த சில மாதங்களாக அவர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

இந்தநிலையில் வைபவ் ராவுத் கைது செய்யப்பட்டது, போலி வழக்குகளில் இந்து அமைப்பை சேர்ந்தவர்களை துன்புறுத்தும் செயலாகும். ஏற்கனவே மாலேகாவ் வழக்கில் இது நிரூபணம் ஆகியுள்ளது” என்றார். 

Next Story