தஞ்சை மாவட்ட கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை கலெக்டர் பேட்டி


தஞ்சை மாவட்ட கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 11 Aug 2018 11:00 PM GMT (Updated: 11 Aug 2018 7:36 PM GMT)

தஞ்சை மாவட்ட கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.

சேதுபாவாசத்திரம்,

கல்லணை திறக்கப்பட்டு பல நாட்களான பின்னரும் தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான சேதுபாவாசத்திரம், குருவிக்கரம்பை உள்ளிட்ட இடங்களில் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.

கடைமடை பாசன வாய்க்கால்களில் முழு கொள்ளளவு தண்ணீரை திறந்து விடக்கோரியும், முறை வைத்து தண்ணீர் திறந்து விடுவதை கைவிடக்கோரியும் குருவிக்கரம்பையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் முதல் புதுப்பட்டினம், சேதுபாவாசத்திரம் வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு முழுமையாக சென்றடைந்து விட்டதா? என்பதை கண்காணிக்கும் வகையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கடைமடை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

புதுப்பட்டினம், கட்டையன்காடு, பூவாணம், புதுக்கரம்பை, பள்ளத்தூர், ஆண்டிக்காடு, சேதுபாவாசத்திரம் கிளை 5-ம் நம்பர் வாய்க்கால், குருவிக்கரம்பை ஆகிய இடங்களில் ஆய்வு நடந்தது.

இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்லணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. ஆனால் கடைமடை வரை முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை. ஏரி, குளங்கள் வறண்ட நிலையிலேயே உள்ளன.

நிலத்தடி நீர்மட்டம் 290 அடிக்கு கீழே சென்றுவிட்டது, குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என விவசாயிகள் கூறுகின்றனர். ஆகவே கடைமடைக்கு தண்ணீர் வழங்குவதில் உள்ள இடையூறுகள் என்ன? என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இடையூறுகளை நீக்கி கடைமடைக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கோவிந்தராஜ் எம்.எல்.ஏ., பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் துரைமாணிக்கம், சுந்தர்ராஜன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story