கருணாநிதி மறைவையொட்டி காயல்பட்டினம், கோவில்பட்டியில் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்


கருணாநிதி மறைவையொட்டி காயல்பட்டினம், கோவில்பட்டியில் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 11 Aug 2018 11:00 PM GMT (Updated: 11 Aug 2018 8:21 PM GMT)

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, காயல்பட்டினம், கோவில்பட்டியில் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலமாக சென்றனர்.

ஆறுமுகநேரி,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, நேற்று மாலையில் காயல்பட்டினம் புதிய பஸ் நிலையம் முன்பிருந்து அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஊர்வலம் காயல்பட்டினம் மெயின் ரோடு, பஜார், கஸ்டம்ஸ் ரோடு வழியாக சென்று கடற்கரையை சென்றடைந்தது. அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது.

இதில், தி.மு.க. மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல தலைவர் தமிழினியன், காங்கிரஸ் மாநில துணை தலைவர் சந்திரசேகர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஆசாத், ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் அமானுல்லா, திராவிடர் கழக மண்டல செயலாளர் பால்ராஜ், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், பா.ம.க. மாவட்ட செயலாளர் சிவபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நைனா முகமது, ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சபா மைந்தன் மற்றும் அனைத்து கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து நேற்று மாலையில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மவுன ஊர்வலமாக சென்றனர். தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். அலங்கரிக்கப்பட்ட மூன்று சக்கர சைக்கிளில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஊர்வலம் மெயின் ரோடு, புது ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக சென்று, காந்தி மைதானத்தை அடைந்தது. அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் சுப்பிரமணியன், ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் காஜா மீரான், பா.ஜ.க. நகர தலைவர் வேல்ராஜ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story