ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் இன்று எடுத்து செல்லப்படுகிறது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் இன்று எடுத்து செல்லப்படுகிறது
x
தினத்தந்தி 11 Aug 2018 10:30 PM GMT (Updated: 11 Aug 2018 9:52 PM GMT)

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து இன்று காலை வஸ்திர மரியாதை பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.

ஸ்ரீரங்கம்,

ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதேபோல் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரம் தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் ஆண்டாளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி இந்த ஆண்டு வஸ்திர மரியாதை பொருட்கள் வழங்கப்படுவதையொட்டி, நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பின்னர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் பட்டு வஸ்திரங்களை யானை மீது அமர்ந்து எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கல பொருட்களை கைகளில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

இன்று எடுத்து செல்லப்படுகிறது

இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கல பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்படும்.

இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தில், தேரில் எழுந்தருளுவார்.

Next Story