காட்பாடியில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி


காட்பாடியில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 11 Aug 2018 10:34 PM GMT (Updated: 11 Aug 2018 10:34 PM GMT)

காட்பாடியில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் குடிபோதையில் காலி மதுபாட்டிலை வீசி கண்காணிப்பு கேமராவை உடைத்தார்.

காட்பாடி,

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- காட்பாடி காந்திநகர் சித்தூர் மெயின் ரோட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்துக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு வாலிபர் வந்தார். அவர் மதுபோதையில் தள்ளாடியபடி கையில் இருந்த காலி மதுபாட்டிலை வைத்துக் கொண்டு ரகளை செய்தார். அந்த வாலிபர் அட்டகாசத்தில் ஈடுபட்டது ஏ.டி.எம். மையத்தின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

கண்காணிப்பு கேமராவை கவனித்த அந்த வாலிபர் திடீரென காலி மதுபாட்டிலை கேமரா மீது வீசி உடைக்க முயன்றுள்ளார். இதில் கேமரா சேதமடைந்தது. பின்னர், ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த வாலிபர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் மீண்டும் தள்ளாடியபடி அங்கிருந்து சாவகாசமாக சென்றார்.

இந்த காட்சிகள் அனைத்தும் சேதமடைந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. ஆனால், வாலிபரின் உருவம் தெளிவாக தெரிய வில்லை. அதனால் அவர் யார்? என்பது அடையாளம் தெரியவில்லை. கண்காணிப்பு கேமரா உடைந்திருப்பதை கண்ட பொதுமக்கள் அது குறித்து வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் விருதம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று ஏ.டி.எம். மையத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், அலுவலகங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் வாலிபரின் உருவம் தெளிவாக தெரிகிறதா? என ஆய்வு செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story