கல்லூரி மாணவி கொலையில் உறவுக்கார வாலிபர் கைது


கல்லூரி மாணவி கொலையில் உறவுக்கார வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2018 11:13 PM GMT (Updated: 11 Aug 2018 11:13 PM GMT)

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கட்டையால் அடித்ததில் கல்லூரி மாணவி இறந்தார். இது தொடர்பாக மாணவியின் உறவுக்கார வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பெங்களூரு,

தாக்கப்பட்டதில் சுருண்டு விழுந்த மாணவியை உறவுக்கார வாலிபர் கற்பழித்தது தெரியவந்து உள்ளது.

ஹாவேரி மாவட்டம் சாவனூர் அருகே மன்னூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியின் மகள் 21 வயது இளம்பெண். இவர், ஹாவேரி புறநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 6-ந் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். இதுகுறித்து அவருடைய பெற்றோர் ஹாவேரி புறநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடிவந்தனர்.

இந்த நிலையில், கடந்த 9-ந் தேதி வரதாஹள்ளி கிராமம் அருகே ஓடும் வரதா ஆற்றுப்பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அருகே மாயமான மாணவியின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து ஹாவேரி புறநகர் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில், மாணவியை கொலை செய்து கற்பழித்ததாக மன்னூர் கிராமத்தை சேர்ந்தவரும், மாணவியின் உறவுக்கார வாலிபருமான சசி என்ற மஞ்சனகவுடா பட்டீல் (வயது 28) என்பவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான சசி அளித்த வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சசி, கல்லூரி மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அவர் கல்லூரி மாணவியை வற்புறுத்தி உள்ளார். இதற்கு கல்லூரி மாணவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசி, வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் கல்லூரி மாணவி மயங்கி விழுந்து இறந்துள்ளார். அதன்பின்னர் அவருடைய உடலுடன் சசி உறவு கொண்டுள்ளார். இதையடுத்து கொலையை மறைக்க முடிவு செய்த சசி, அவருடைய உடலை சாக்குப்பையில் கட்டி மேம்பாலத்தின் அருகே வைத்து எரித்துள்ளார்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story