திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் போட்டி திவாகரன் மகன் பேட்டி


திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் போட்டி திவாகரன் மகன் பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2018 11:00 PM GMT (Updated: 12 Aug 2018 6:46 PM GMT)

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிட வாய்ப்பு உள்ளது என புதுக்கோட்டையில் திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் நிருபர்களிடம் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக போஸ் மக்கள் பணியக தலைவரும், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரனின் மகனுமான ஜெய் ஆனந்த் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அண்ணா திராவிடர் கழகம் போட்டியிட வாய்ப்பு உள்ளது. திருவாரூரில் நடக்கும் இடைத்தேர்தலில் தலைமை உத்தரவிட்டால் நான் போட்டியிடுவேன். தற்போதைய தமிழக அரசு கட்சியை பலப்படுத்துகிறார்களோ இல்லையோ தனது பதவி காலமான 5 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்து விடுவார்கள். மன்னார்குடியில் உள்ள ஒரு பவர்செக்டார் முடிந்து விட்டதாக தினகரன் எங்களை பற்றி விமர்சனம் செய்து உள்ளார். ஆனால் உண்மையாக பவரை இழந்து இருப்பவர் தினகரன் தான். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா, தினகரனிடம் பவர் செக்டாராக 122 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியை ஒப்படைத்து விட்டு சென்றார்.

ஆனால் 18 எம்.எல்.ஏ.க்களை மட்டும் தங்கள் பக்கம் வைத்து கொண்டு கட்சியையும், ஆட்சியையும் இழந்து தனிக்கட்சி ஒன்றை தொடங்கி பவர்போய் தனியாக உள்ளவர் தினகரன் தான். தற்போது அவரது கட்சியிலேயே அவருக்கு எதிராக அதிருப்தி தலை தூக்கி உள்ளது. அடுத்த தலைவர் நான் தான் என்று கூறிக்கொள்பவர். தற்போது நல்ல கலாசாரத்தை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்லவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் செலவு செய்ததுபோன்ற செலவு செய்தால், ஒரு லட்சம் வாக்கு அல்ல 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். அ.தி.மு.க.வை தினகரன் கைப்பற்றுவார் என்ற நம்பிக்கை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story