மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது


மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது
x
தினத்தந்தி 12 Aug 2018 11:15 PM GMT (Updated: 12 Aug 2018 7:11 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவிரி, கொள்ளிடம் ஆறுகள் கரை புரண்டு ஓடுகிறது.

திருச்சி,

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அம்மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை கடந்த மாதம் 22-ந்தேதி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து வரப்பெற்ற தண்ணீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது. காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த 24-ந்தேதி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்னர் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் தண்ணீர் கரைகளை தொட்டபடி சென்றது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடிக்கும் கீழ் குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 116 அடி அளவிற்கு இறங்கியது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவது கடந்த 31-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆறு மீண்டும் மணற்பாங்காக காட்சி அளித்தது.

இந்நிலையில் கர்நாடகத்தில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் கடந்த 3 நாட்களாக அங்கிருந்து படிப்படியாக காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்தது. கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைந்தது. இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நிரம்பியது. இதனை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி கர்நாடகாவில் இருந்து வந்த உபரி நீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 35 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது. இதனால் முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்தில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 91 ஆயிரம் கன அடியாக இருந்தது. இதனை தொடர்ந்து காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. இதனால் இந்த இரு ஆறுகளிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் கடல் அலை போல் பேரிரைச்சலுடன் நீர் செல்கிறது. ஆற்றின் நடுவில் சலவை தொழிலாளர்கள் துணி துவைப்பதற்காக ஏற்கனவே அமைத்து இருந்த தண்ணீர் தொட்டிகளை சூழ்ந்தபடி தண்ணீர் செல்கிறது. கரையோர பகுதியில் உள்ள குடிசைகளுக்குள் எந்த நேரமும் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் இருப்பதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு மேடான பகுதிக்கு செல்லும்படி திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

பொதுப்பணித்துறை திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் செயற்பொறியாளர் கணேசன் நிருபர்களிடம் கூறுகையில் ‘முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படும். கூடுதலாக உள்ள தண்ணீர் அனைத்தும் அப்படியே கொள்ளிடத்தில் தான் திறக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கொள்ளிடத்தில் வினாடிக்கு 91 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டால் இதே நிலை தொடர்ந்து நீடிக்கும். கொள்ளிடத்தை பொறுத்தவரை வினாடிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீரை தாங்க கூடியது என்பதால் இன்னும் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விட்டாலும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது’ என்றார்.

திருச்சி மாவட்டத்தில் காவிரியின் கிளை வாய்க்கால்களான உய்ய கொண்டானில் வினாடிக்கு 800 கன அடி, பழைய கட்டளை, புதிய கட்டளை, புள்ளம்பாடி, அய்யன், பெருவளை ஆகிய வாய்க்கால்களில் தலா 400 கன அடி, மற்றும் வடகரை, தென்கரை, காட்டுப்புத்தூர், ராமவாத்தலை உள்ளிட்ட எல்லா கிளை வாய்க்கால்களிலும் சேர்த்து மொத்தம் 4,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

Next Story