சுற்றுலா வந்த இடத்தில் மனநலம் பாதித்து காணாமல் போன மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து இலங்கைக்கு அழைத்து சென்ற தந்தை


சுற்றுலா வந்த இடத்தில் மனநலம் பாதித்து காணாமல் போன மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து இலங்கைக்கு அழைத்து சென்ற தந்தை
x
தினத்தந்தி 13 Aug 2018 12:15 AM GMT (Updated: 12 Aug 2018 7:51 PM GMT)

சுற்றுலா வந்த இடத்தில் மனநலம் பாதித்து காணாமல் போன தனது மகனை 9 ஆண்டுகளுக்கு பிறகு அவரது தந்தை கண்டுபிடித்து இலங்கைக்கு அழைத்து சென்றார்.

கூடலூர்,

இலங்கையை சேர்ந்தவர் சத்தியவான்(வயது 74). இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள். அதில் 2–வது மகன் சுதர்சன் (வயது 31). இவர் கடந்த 30–9–2009–ம் அன்று இலங்கையில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா வந்தார். அதன்பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பவில்லை.

இதையடுத்து இந்தியாவிற்கு சென்ற தனது மகன் காணாமல் போய்விட்டதாக சத்தியவான் தூதரகத்தில் புகார் செய்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சத்தியவான் இந்தியாவுக்கு அடிக்கடி வந்து தனது மகனை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் மகனை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் இலங்கைக்கு சென்றார்.

இந்த நிலையில் கடந்த 2013–ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு சத்தியவான் வந்தார். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் அதிகளவு வசிப்பதால், இங்கு தனது மகன் இருக்கலாம் என தேடும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது பந்தலூர் பஸ் நிலையத்தில் மனநலம் பாதித்த நிலையில் தனது மகன் சுதர்சன் இருப்பதை கண்டு சத்தியவான் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் மகனுக்கு புதிய ஆடைகள் வாங்கி கொடுத்த சத்தியவான், மனநலம் பாதித்த மகனுக்கு சிகிச்சை அளிக்க கேரளாவுக்கு அழைத்து சென்றார். அங்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பின்னர் இலங்கைக்கு மகனை அழைத்து செல்ல சத்தியவான் முயன்றார். இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டார். ஆனால் பாஸ்போர்ட் இல்லாததால் சுதர்சனை இலங்கைக்கு அழைத்து செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தேவாலாவில் உள்ள உறவினர் வீட்டில் மகன் சுதர்சனை ஒப்படைத்து விட்டு சத்தியவான் மீண்டும் இலங்கைக்கு சென்றார்.

இந்த நிலையில் கடந்த மாதம் இலங்கையில் இருந்து சத்தியவான் மீண்டும் தேவாலா வந்தார். பின்னர் ஏ.ஐ.டி.யூ.சி. கட்சி மாவட்ட தலைவர் டி.பாலகிருஷ்ணனை சந்தித்து முறையிட்டார். இதுகுறித்து மறுவாழ்வுத்துறை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஒலிவர் ஐருளு கவனத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் கொண்டு சென்றது.

மேலும் மறுவாழ்வுத்துறை இயக்குனரிடம் தனது மகனை இலங்கைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி சத்தியவான் கோரிக்கை மனு அளித்தார். இதைத்தொடர்ந்து சுதர்சன் இலங்கை செல்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அனுமதி இன்றி இந்தியாவில் இவ்வளவு நாட்கள் இருந்ததற்காக சுதர்சனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை சுதர்சன் தந்தை சத்தியவான் உடனடியாக செலுத்தினார். பின்னர் தூதரகம் மூலம் சுதர்சனுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த சத்தியவான் 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகன் சுதர்சனை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்து சென்றார். சட்ட ரீதியாக பல்வேறு தடைகள் இருந்த நிலையில், பல கட்டங்களாக போராடி தனது மகனை இலங்கைக்கு மீண்டும் தந்தை அழைத்து சென்ற பாச போராட்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Next Story