வழிப்பறியில் ஈடுபட்டபோது பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கைது


வழிப்பறியில் ஈடுபட்டபோது பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கைது
x
தினத்தந்தி 12 Aug 2018 9:45 PM GMT (Updated: 12 Aug 2018 7:53 PM GMT)

வழிப்பறியில் ஈடுபட்டபோது பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கைது 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்.

பிராட்வே,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் நேசன் (வயது 40). இவர், நேற்று காலை முத்தையால்பேட்டை பகுதியில் நடந்து சென்றபோது, மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர், நேசனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 700 ரூபாயை பறித்துச்சென்றுவிட்டார். இது குறித்த புகாரின்பேரில் முத்தையால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் ராயபுரம் பழைய பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்ற ஒருவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர், சென்னை பாரிமுனை வி.ஆர்.என். கார்டன் பகுதியை சேர்ந்த பாலாஜி என்ற காக்கா தோப்பு பாலாஜி (38) என்பதும், நேசனிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 கத்திகள், மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் கைதான காக்கா தோப்பு பாலாஜி, முத்தையால்பேட்டை போலீஸ் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது கொலை, வழிப்பறி உள்பட மொத்தம் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும், பல வழக்குகளில் இவர் தலைமறைவு குற்றவாளி என்பதும் தெரியவந்தது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story