கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளின் கரைகள் தீவிர கண்காணிப்பு


கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளின் கரைகள் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2018 11:00 PM GMT (Updated: 12 Aug 2018 8:18 PM GMT)

கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளின் கரைகளை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக காவிரியின் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி உள்ளன. தொடர்ந்து இந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை 2-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரி முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதை தொடர்ந்து காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கல்லணையில் இருந்து காவிரியில் 9,010 கன அடியும், வெண்ணாற்றில் 9,022 கன அடியும், கல்லணைக்கால் வாயில் 2,750 கனஅடியும், கொள்ளிடத்தில் 8,070 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் 8,070 கனஅடியும், முக்கொம்பு அணையில் இருந்து 28,090 கனஅடி தண்ணீரும் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது கொள்ளிடத்தில் மொத்தமாக 36 ஆயிரத்து 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு பெருக்கெடுத்து தண்ணீர் ஓடுகிறது. இதனால் ஆறுகளின் கரைகளை கண்காணிக்க கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொள்ளிட கரை மட்டும் அல்லாது வெண்ணாறு காவிரி, கல்லணைக்கால்வாய்கரைகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என பூதலூர் தாசில்தார் இளங்கோ தெரிவித்தார்.மேலும் கொள்ளிடக்கரையில் அதிக தண்ணீர் வரும் என்பதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும், பொதுப்பணித்துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். 

Next Story