திருவையாறு அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


திருவையாறு அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 12 Aug 2018 10:45 PM GMT (Updated: 12 Aug 2018 8:28 PM GMT)

திருவையாறு அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த மேலத்திருப்பந்துருத்தி வண்ணான் சந்து தெருவை சேர்ந்தவர் பதுர்தீன். இவருடைய மகன் முகமது ரிஷ்வான் (வயது14). இவன் நடுக்காவேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் முகமது ரிஷ்வான் தனது நண்பர்களுடன் மேலத்திருப்பந்துருத்தி குடமுருட்டி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென முகமது ரிஷ்வானை காணவில்லை. இதனால் நண்பர்கள் அவனது வீட்டுக்கு சென்று முகமது ரிஷ்வான் வந்தானா? என கேட்டுள்ளனர். அதற்கு வரவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆற்றில் தேடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார், திருவையாறு தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) கணேசன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் தேடினர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு முகமது ரிஷ்வான் பிணம் மீட்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த முகமது ரிஷ்வான் ஆற்றில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story