தார்சாலை அமைக்கும் பணிகள் நிறைவு: சேலம் புதிய பஸ்நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வருகிறது


தார்சாலை அமைக்கும் பணிகள் நிறைவு: சேலம் புதிய பஸ்நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வருகிறது
x
தினத்தந்தி 12 Aug 2018 11:15 PM GMT (Updated: 12 Aug 2018 9:02 PM GMT)

தார்சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதால் சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து அனைத்து வழித்தட பஸ்களும் இன்று முதல் இயக்கப்படுகிறது.

சேலம்,

சேலம் புதிய பஸ்நிலையத்தில் 2 பிரிவுகளாக கான்கிரீட் தரைதளத்தை புதுப்பிக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த பணிகள் தொடங்கி நடைபெற்றது. அப்போது கான்கிரீட் தளம் அமைக்க மண்பரிசோதனை நடைபெற்றது. இதில் மண் ஈரப்பதம் இருப்பது கண்டறியப்பட்டதுடன், கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பஸ்நிலையத்தில் உள்ள 2 பிரிவுகளிலும் மீண்டும் தார்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக தற்காலிகமாக சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் இருந்து வடமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதே நேரத்தில் புதிய பஸ் நிலையத்தின் முதல் பிரிவில் தரைத்தளம் பணிகள் தொடங்கி முடிவடைந்தது. இதையடுத்து அங்கிருந்து வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், விழுப்புரம், சென்னை, புதுச்சேரி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 2-வது பிரிவில் தரைத்தளம் அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் அங்கிருந்து இயக்கப்பட்ட நாமக்கல், கரூர், மதுரை, திருச்சி, ஈரோடு, கோவை வழியாக செல்லும் பஸ்கள் ஜவகர் மில் திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது.

இந்த நிலையில் நேற்று 2-வது பிரிவில் பழைய தார்களை அகற்றி விட்டு ஜல்லிக்கற்கள் போடப்பட்டு புதிய தார்சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனால் இன்று (திங்கட்கிழமை) முதல் ஜவகர் மில் திடலில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்த மதுரை, திருச்சி, ஈரோடு, கோவை மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும் புதிய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என மாநகர போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து வழித்தட பஸ்களும் இயக்கப்படுவதால் பஸ் நிலையம் இன்று முதல் முழுமையாக பயன்பாட்டுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story