தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்


தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
x
தினத்தந்தி 12 Aug 2018 10:45 PM GMT (Updated: 12 Aug 2018 9:14 PM GMT)

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என நாமக்கல்லில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாமக்கல்,

கூட்டுறவு தணிக்கை துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சதீஷ்குமார் வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் கன்னியப்பன், பொருளாளர் பொன்னிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத், செயலாளர் முருகேசன், சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் ராமதாஸ் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், முதுநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களை மீண்டும் உடனடியாக நிரப்ப அரசை கேட்டுக்கொள்வது. மேலும் சிறப்பு பணி தணிக்கைக்காக ஒரு மாவட்டத்தில் இருந்து அருகாமையில் உள்ள மாவட்டத்திற்கு அனுப்பாமல், தொலைதூர மாவட்டத்திற்கு அனுப்புவதால், தணிக்கையாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக நேருகிறது.

எனவே இதுபோன்ற தொலைதூர மாவட்டங்களுக்கு சிறப்பு பணிக்கு அனுப்புவதை வரும் காலங்களில் தவிர்க்க கூட்டுறவு தணிக்கை இயக்குனரை கேட்டுக்கொள்வது. கூடுதலாக 10 துணை இயக்குனர் பணியிடமும், 5 இணை இயக்குனர் பணியிடமும், ஒரு கூடுதல் இயக்குனர் பணியிடமும் வழங்க இயக்குனரை கேட்டுக்கொள்வது.

குறியீட்டு தணிக்கையை கைவிட வலியுறுத்துவது. குற்றவியல் வழக்குகளில் தணிக்கையாளரை சேர்க்காதிருக்க வலியுறுத்துவது. புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட கேட்டுக்கொள்வது. சிறப்பு பணி தணிக்கைக்கு செல்லும் தணிக்கையாளர்களுக்கு பயணப்படி உச்சவரம்பு இன்றி வழங்க கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு தணிக்கைத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தணிக்கையாளர் பாலாஜி நன்றி கூறினார். 

Next Story