4 வயது குழந்தையை தவிக்க விட்டு போலீஸ்காரர் மனைவி மாயம்


4 வயது குழந்தையை தவிக்க விட்டு போலீஸ்காரர் மனைவி மாயம்
x
தினத்தந்தி 12 Aug 2018 9:30 PM GMT (Updated: 12 Aug 2018 9:31 PM GMT)

செல்போனில் பல ஆண்களுடன் பேசிய மனைவியை போலீஸ்கார கணவர் கண்டித்தார். எனவே 4 வயது குழந்தையை தவிக்க விட்டு மனைவி மாயமாகி விட்டார்.

கன்னிவாடி,



திண்டுக்கல் அருகே உள்ள கன்னிவாடி காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜா(வயது24). இவர் கோவை 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி ஏஞ்சல்புளோரி(24). இவர் களுக்கு மேனிஷா(4) என்ற பெண் குழந்தை உள்ளது. ஏஞ்சல்புளோரி கணவருக்கு தெரியாமல் ஒரு செல்போன் வைத்து இருந்தார். இந்தநிலையில் வேல்ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார். எனவே அந்த செல்போனை ஏஞ்சல்புளோரி ஒரு பையில் மறைத்து வைத்தார். அப்போது அந்த செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதன் ஒலி கேட்டு வேல்ராஜா அந்த செல்போனை எடுத்து பார்த்தார். இதில் பல ஆண்களுடன் செல்போனில் ஏஞ்சல்புளோரி பேசியது தெரியவந்தது. எனவே அவர் மனைவியை கண்டித்தார். பின்னர் அவர் அருகில் உள்ள கடைக்கு சென்றார்.

இந்தநிலையில் ஏஞ்சல் புளோரி 4 வயது குழந்தையை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு அங்கிருந்து மாயமாகி விட்டார்.

கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய வேல்ராஜா மனைவி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் ஏஞ்சல்புளோரியை காணவில்லை.
எனவே அவர் இதுகுறித்து நேற்று முன்தினம் கன்னிவாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Next Story