கருணாநிதி மறைவு: நாகர்கோவிலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மவுன ஊர்வலம்


கருணாநிதி மறைவு: நாகர்கோவிலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 12 Aug 2018 10:45 PM GMT (Updated: 12 Aug 2018 9:51 PM GMT)

கருணாநிதி மறைவையொட்டி நாகர்கோவிலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் நேற்று மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது.

நாகர்கோவில்,

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதி மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, குமரி மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் நாகர்கோவிலில் நேற்று மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. அதைதொடர்ந்து கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஊர்வலமாக வந்தனர். கருணாநிதி மறைவுக்கு துக்கம் தெரிவிக்கும் விதமாக, தி.மு.க. தொண்டர்கள் உள்பட மாற்றுக்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பெரும்பாலானோரும் ஊர்வலத்தில் கருப்புச்சட்டை அணிந்து கலந்து கொண்டனர். மேலும், கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய ஊர்வலம் ஒழுகினசேரி, வடசேரி அண்ணாசிலை, கேப் ரோடு, மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு வழியாக, நகராட்சி பூங்கா அருகே முடிவடைந்தது. பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் முக்கிய நிர்வாகிகள் கருணாநிதிக்கு புகழுரை வாசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ஆஸ்டின், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், நகர செயலாளர் மகேஷ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சிவன்பிள்ளை, விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., முஸ்லிம் லீக், த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story