குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது இளம்பெண் திடீர் சாவு


குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது இளம்பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 13 Aug 2018 9:30 PM GMT (Updated: 13 Aug 2018 5:46 PM GMT)

ஆழ்வார்திருநகரியில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது இளம்பெண் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் விசாரணை நடத்தி வருகிறார்.

தென்திருப்பேரை,


தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 25). வேன் டிரைவர். இவருடைய மனைவி சத்யா (20). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மாத ஆண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் மாலையில் சத்யா தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இறந்த சத்யாவின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான ஒரு ஆண்டில் சத்யா இறந்ததால், தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் மேல் விசாரணை நடத்தி வருகிறார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம்பெண் திடீரென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story