சுதந்திர தினவிழா: மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி


சுதந்திர தினவிழா: மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி
x
தினத்தந்தி 16 Aug 2018 10:15 PM GMT (Updated: 16 Aug 2018 9:23 PM GMT)

சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியப்போட்டி நடந்தது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் நீதிமன்ற வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் வழக்கறிஞர் சங்கத்தலைவர் ராஜேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தலைமை எழுத்தர் ராதாகிருஷ்ணன், சங்க பொருளாளர் ஜெகஜீவன் ராம், செயலாளர் கனகராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ராஜபாளையம் சட்டமன்ற அலுவலகத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்கள், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், ஒன்றியச் செயலாளர் தங்கச்சாமி, நகர துணைச்செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு அலுவலர் சேதுராஜன் தேசியக் கொடி ஏற்றினார். இதில் சுகாதார ஆய்வாளர் இளங்கோவன், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி செயலாளர் கருத்தபாண்டியன் தலைமையில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவில் குழந்தைகள்நல மருத்துவர் ராஜதுரை கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ரெங்கராஜன், உறவின்முறை பொருளாளர் கண்ணன், செயலாளர் முப்பழம், தர்மகர்த்தா மதிபாலன், உதவி காரியதரிசி கென்னடி, உறவின்முறை இணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடார் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை பூங்கொடி, மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுமதி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ஸ்ரீராவ்பகதூர் ஏ.கே.டி.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுதந்திர தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. முடிவில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் உமாசங்கர் நன்றி கூறினார்.

ராஜபாளையம் சத்யா வித்யாலயா பள்ளியில் சுதந்திர தின விழா பள்ளித்தாளாளர் குமரேசன்் தலைமையில் பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி அரவிந்த், நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பள்ளி மேனேஜிங் டிரஸ்டி சித்ரா கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற நினைவுத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் மாணவி பிருந்தா நன்றி கூறினார். ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா பள்ளிச் செயலாளர் அழகராஜா தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக அரிமா சங்க விருதுநகர் மாவட்ட முன்னாள் ஆளுநர் ராஜூ கொடியேற்றி பேசினார். முன்னதாக, பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. உதவித் தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் நடந்த சுதந்திரதின விழாவில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் கவுரி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கச் செயலாளர் குமரேசன் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து தேசிய மாணவர் படையின் அணிவகுப்பினை ஏற்றுக்கொண்டார். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கந்தசாமி பாண்டியன் நன்றி கூறினார். பின்னர் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி தனித்தனியாக நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே சங்கம்பட்டி ஹரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் பள்ளி தாளாளர் இந்திரா தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கீழராஜகுலராமன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளியின் ஆலோசகர் கணேசன் வரவேற்று பேசினார்.

ராஜபாளையம் வைமா வித்யாலயாவில் சுதந்திர தினவிழா வைமா கல்வி நிறுவனங்களின் மேனேஜிங் டிரஸ்டி அருணாதேவி தலைமையில் நடந்தது. விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ராஜபாளையம் கேசா டி மிர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளித்தாளாளர் திருப்பதிசெல்வன் தேசியக்கொடி ஏற்றி மாணவர்களுக்கு சுதந்திர தின விழா பற்றி எடுத்துரைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் செல்வக்குமார் வரவேற்று பேசினார். முடிவில் அறிவொளி நன்றி கூறினார். ராமச்சந்திரராஜா குருகுலம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா மம்சாபுரம் பிள்ளைமார் சமுதாய தலைவர்துரைச்சாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராஜா, தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா மற்றும் டிரஸ்டி ஸ்ரீராம் விஷ்ணுராஜா, ஸ்ரீராம் வெங்கட்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பள்ளி முதல்வர் சுரேஷ் தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டது. விழாவில் ஓவியப்போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியை பாண்டி மீனா நன்றி கூறினார். ராமலிங்க விலாஸ் ஜெயராம் தொடக்க பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் பள்ளிச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். தலைமையாசிரியை மகேஷ்வரி வரவேற்று பேசினார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு சுதந்திர தினத்தின் சிறப்பு குறித்து கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டி நடைபெற்றது. ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.

Next Story