அவினாசி ரோடு மேம்பாலத்தில் தடுப்புசுவர் கட்டும் பணி தொடக்கம்


அவினாசி ரோடு மேம்பாலத்தில் தடுப்புசுவர் கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 16 Aug 2018 11:33 PM GMT (Updated: 16 Aug 2018 11:33 PM GMT)

கோவை அவினாசி ரோடு மேம்பாலம் ரவுண்டானாவில் தடுப்பு சுவர் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

கோவை,

கோவை உப்பிலிபாளையத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அவினாசி ரோடு மேம்பாலம் கட்டப்பட்டது. இதன் கீழ் சுரங்கப்பாதையும் உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள ரவுண்டானாவில் இருந்து கூட்செட் சாலை, மரக்கடை, புருக்பாண்ட் ரோடு ஆகிய இடங்களுக்கு பாதை பிரிந்து செல்கிறது. இந்த ரவுண்டானவை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்கள் வலுவிழந்து காணப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் தடுப்பு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சார்பில் அவினாசி ரோடு மேம்பாலத்தை சீரமைக்க முடிவு செய்தனர். இதற்கான நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ரவுண்டானாவில் உள்ள பழைய தடுப்பு சுவர்கள் இடித்து அகற்றப்பட்டன. பின்னர் நவீன கருவிகள் உதவியுடன் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது, அவினாசி ரோடு மேம்பாலத்தில் புதிய தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது. இதேபோல் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம். இந்த பணிகள் முடிவடைந்ததும் மேம்பாலம் புதிய தோற்றம் பெறும், என்றார்.

Next Story