சென்னையில் நடந்த தொடர் கொள்ளையில் மேலும் 3 பேர் கைது தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்


சென்னையில் நடந்த தொடர் கொள்ளையில் மேலும் 3 பேர் கைது தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Aug 2018 11:00 PM GMT (Updated: 17 Aug 2018 7:32 PM GMT)

சென்னையில் நடந்த தொடர் கொள்ளையில் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பூந்தமல்லி,

சென்னை அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் சில மாதங்களாக பங்களா வீடுகள், நகை கடைகளில் தொடர் கொள்ளைகள் நடந்து வந்தன. இதையடுத்து அண்ணா நகர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு காரைக்காலை சேர்ந்த மணிகண்டன், திண்டுக்கல்லை சேர்ந்த கோபால், புதுச்சேரியை சேர்ந்த ரகு, மூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3/4 கிலோ தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

3 பேர் கைது

அவர்கள் அளித்த தகவலின் பேரில் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம், நாரையூரை சேர்ந்த தினகரன் (வயது 31), திருவாரூரை சேர்ந்த முருகன் உள்ளிட்ட சிலரை பிடிக்க அண்ணா துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் நெல்லையில் தினகரனை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் நாகையை சேர்ந்த லோகநாதன் (52), காளிதாஸ் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

வாக்கி டாக்கி

தினகரன், முருகன் ஆகியோர் கொள்ளை அடிக்கும் முன் வீட்டை முதலில் நோட்டமிடுவார்கள். வீட்டில் ஆட்கள் இல்லாதபோது ஒருவர் வீட்டின் பூட்டை கடப்பாறையால் உடைத்து உள்ளே செல்வார். மற்றொருவர் வெளியே நின்று காவல் காப்பார். செல்போன் பயன்படுத்தினால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் வாக்கி டாக்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

வெளியில் இருக்கும் நடமாட்டங்களை வீட்டிற்குள் இருப்பவருக்கு வாக்கி டாக்கி மூலமே தகவலை கொடுப்பார். மாடி வீடுகளில் கொள்ளையடிக்க கயிறுகளை கையோடு எடுத்து செல்வார்கள். கொள்ளை அடித்த நகைகளை லோகநாதன், காளிதாசிடம் கொடுப்பார்கள். அவர்கள் அதை உருக்கி விற்று பணமாக மாற்றி கொடுத்து வந்தது மட்டுமல்லாமல் கொள்ளையர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து வந்தனர். அதற்காக குறிப்பிட்ட தொகையையும் பெற்றுள்ளனர்.

பறிமுதல்

கொள்ளை அடித்த பணத்தில் திருவாரூர் பகுதியில் உள்ள ஏழை வாலிபர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு பண உதவி, பள்ளிகளுக்கு நன்கொடை என முருகன் கொடுத்து வந்துள்ளார். முருகன், தினகரனை புதுச்சேரி, கர்நாடகம், கேரள போலீசாரும் தேடி வந்தனர்.

இவர்கள் மீது 21 கொள்ளை வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட தினகரன், லோகநாதன், காளிதாஸ் ஆகியோரிடம் இருந்து 3 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி, 1000 யூரோ டாலர்கள், 2 வாக்கி டாக்கிகள், கடப்பாறை, கயிறு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகிறோம்.

செல்போனால் சிக்கினர்

அண்ணா நகரில் கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்திக்கொண்டு இருந்தபோது அங்கு சந்தேகத்துக்கு இடமாக மொபட்டில் 2 பேர் வந்தனர். அவர்களின் செல்போனை வாங்கி விசாரித்தபோது அவர்கள் செல்போனை விட்டு, விட்டு மொபட்டில் தப்பி சென்றனர். அந்த செல்போனில் முருகன், தினகரன் ஆகியோரின் படங்கள், செல்போன் எண்கள் இருந்தன. அந்த செல்போன் கொள்ளையர்களை பிடிக்க உதவியாக இருந்தது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

துணை கமிஷனர் பேட்டி

கொள்ளையர்கள் கைது குறித்து அண்ணா நகர் துணை கமிஷனர் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது: -

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடந்த கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்தோம். தனிப்படை போலீசாரின் தீவிர நடவடிக்கையால் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

200 பவுன் நகை

மொத்தம் 19 வழக்கில் ஒரு வீட்டில் மட்டும் 200 பவுன் நகை திருட்டு போய் உள்ளது. மீட்கப்பட்ட நகைகள் உரிய நபர்களிடம் நீதிமன்றம் மூலம் ஒப்படைக்கப்படும். எந்த இடத்தில் திருடினால் அதிக நகைகள் கிடைக்கும் என்ற நோக்கில் இங்கு திருடி உள்ளனர். வாக்கி டாக்கி வாங்கியது எந்த இடம் என்பது விசாரணையில் தெரியவரும். 9 பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள முருகன் உள்பட 2 பேரை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story