திருவண்ணாமலை பஸ் நிலையத்துக்குள் மோட்டார்சைக்கிள், கார் செல்ல தடை


திருவண்ணாமலை பஸ் நிலையத்துக்குள் மோட்டார்சைக்கிள், கார் செல்ல தடை
x
தினத்தந்தி 18 Aug 2018 11:00 PM GMT (Updated: 18 Aug 2018 7:50 PM GMT)

திருவண்ணாமலை பஸ் நிலையத்துக்குள் மோட்டார்சைக்கிள், கார், ஆட்டோ செல்ல தடை விதித்து போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். வெளியூர்களுக்கு, பிற மாவட்டங்களுக்கு மக்கள் அதிகம் பேர் சென்று வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பஸ்கள் மூலம் அதிகமாக பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார்சைக்கிள், கார் போன்ற பஸ்களை தவிர பிற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்திக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து நேற்று அவர் பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள், கார்களை எடுக்க கூறினார்.

இனிமேல் பஸ் நிலையத்திற்குள் பஸ்களை தவிர மோட்டார்சைக்கிள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதித்தார். அவ்வாறு செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தார்.

மேலும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபடக்கூடாது என்றும், தள்ளுவண்டிகள், தரைக்கடைகளையும் அகற்றவும், பர்மிட் இல்லாமல் இயங்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story