பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 22 Aug 2018 10:45 PM GMT (Updated: 22 Aug 2018 8:26 PM GMT)

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

பெரம்பலூர்,

முஸ்லிம்களின் தியாகத் திருநாளாக போற்றப்படும் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்திலும் பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடினர். பெரம்பலூரில் மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

டவுன் இமாம் முகம்மது, சல்மான் அன்வாரி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த சிறப்பு தொழுகையில் டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி யூசுப், நாட்டாமை முனவர் ஷெரீப், உலமா சபை மாவட்டத் தலைவர் முகம்மது முனீர், டாக்டர் ஹூசைன், மதரசா சத்தார், சாகுல்அமீது, வக்கீல் முகமது இல்யாஸ், அப்துல்லா உள்பட ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் சிறுவர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடைகளை அணிந்து தொழுகையில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரையொருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். பிறகு முஸ்லிம்கள் மாடு, ஆடுகளின் இறைச்சிகளை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு குர்பானியாக கொடுத்து மகிழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து முஸ்லிம்கள் டவுன் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு வழிபாடு நடத்தியபின்பு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

பக்ரீத் பண்டிகையையொட்டி பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் ஜே.கே.மகால் வளாகத்தில் அபுல் கலாம் ஆசாத் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை நடத்தி யது குறிப்பிடத்தக்கது. தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவருக்கு, ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். முஸ்லிம் சிறுவர்-சிறுமிகளும் ஒருவரையொருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இதேபோல பெரம்பலூரை அடுத்த லெப்பைக்குடிகாடு, வி.களத்தூர், வாலிகண்டபுரம், தேவையூர்,விஸ்வக்குடி, பாடாலூர், செட்டிகுளம், தேனூர், நக்கசேலம், து.களத்தூர் பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.

இதேபோல் பக்ரீத் பண்டிகையையொட்டி அரியலூர் நகர ஜூம்மா பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் அவர்கள் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு, ஒருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுவூர், வெங்கனூர், திருமானூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், விக்கிரமங்கலம், செந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story