கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு: ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைப்பு: ஒகேனக்கல், மேட்டூருக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 22 Aug 2018 11:57 PM GMT (Updated: 22 Aug 2018 11:57 PM GMT)

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல், மேட்டூருக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

மேட்டூர்,

கர்நாடகா, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.

இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. எனினும் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவிகளை மூழ்கடித்தப்படி தண்ணீர் சென்றது.

இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்ததால் ஐந்தருவி பகுதிகளில் பாறைகள் வெளியே தெரிய தொடங்கின. எனினும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் விதித்த தடை 45-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது. மேலும் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையும் 13-வது நாளாக நீடிக்கிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120.21 அடியாக இருந்தது. பின்னர் மாலை 3 மணி அளவில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைந்தது. வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

அணையின் 16 கண் பாலத்தில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும், நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய் வழியாக வினாடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று விடுமுறை தினமான பக்ரீத் பண்டிகையையொட்டி மேட்டூர் அணை பூங்காவை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் அணை பூங்காவில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அணை பூங்காவில் உள்ள செயற்கை நீருற்றுக்களை சுற்றுலா வந்த குழந்தைகள் ஆர்வத்துடன் பார்த்தனர். பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனங்கள், கார், வேன்களில் வந்திருந்ததால் அணை பூங்கா செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேட்டூர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story