முக்கொம்பு கொள்ளிடத்தில் புதிய அணையை 15 மாதங்களில் கட்டி முடிப்போம் அதிகாரி தகவல்


முக்கொம்பு கொள்ளிடத்தில் புதிய அணையை 15 மாதங்களில் கட்டி முடிப்போம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 25 Aug 2018 11:00 PM GMT (Updated: 25 Aug 2018 6:59 PM GMT)

இயற்கை ஒத்துழைத்தால் முக்கொம்பு கொள்ளிடத்தில் புதிய அணையை 15 மாதங்களில் கட்டி முடிப்போம் என்று பொதுப்பணித்துறை அதிகாரி கூறினார்.

ஜீயபுரம்,

திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மேலணையில் இருந்து டெல்டா பாசன விவசாயத்திற்காக பயன்படும் காவிரி ஆறும், உபரிநீர் செல்லும் கொள்ளிடம் ஆறும் உள்ளது. உபரிநீர் செல்லும் கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் கடந்த 22-ந் தேதி இடிந்து விழுந்தன. தொடர்ச்சியாக 15 நாட்களுக்கும் மேலாக வந்த வெள்ளப்பெருக்கு காரணமாக 182 ஆண்டு கால பழமையான பாலத்துடன் கூடிய கொள்ளிடம் அணை உடைந்தது விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடைந்து சேதமான கொள்ளிடம் அணையை நேற்று முன்தினம் பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொள்ளிடம் இடிந்த அணைக்கு பதிலாக 100 மீட்டருக்கு அப்பால் (கிழக்குப்பகுதி) ரூ.325 கோடியில் புதிய தடுப்பணையும், 10 மதகுகள் கொண்ட வடகரையில் ரூ.85 கோடி மதிப்பில் புதிய தடுப்பணையும் என மொத்தம் ரூ.410 கோடி செலவில் புதிதாக 2 தடுப்பணைகள் கட்டப்படும் என தெரிவித்தார். மேலும் இப்பணிகள் தொடங்கப்பட்டு 15 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயித்து இருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து கொள்ளிடத்தில் புதிய தடுப்பணை அமைய உள்ள கிழக்குப்பகுதியில், பொதுப்பணித்துறையில் உள்ள மூத்த பொறியாளர்களை கொண்ட நிபுணர் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இது தொடர்பாக திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் கூறியதாவது:-

கொள்ளிடம் புதிய தடுப்பணை ஏற்கனவே இருந்த அணையை போன்றே கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு முதல்-அமைச்சரிடம் காட்டப்பட்டது. பொதுப்பணித்துறையில் உள்ள மூத்த பொறியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பொறியாளர்கள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட குழு வரைபடம் தயாரிக்கவும், 5 பேர் குழு மண் ஆய்வு செய்யவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்குழுவினர் புதிய தடுப்பணை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து வருகிறார்கள்.

விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பிய பின்னர், கட்டுமான பணிகள் தொடங்கும். காவிரியில் தடுப்பணை கட்டுவது என்பது சிரமமானது. அங்கு தண்ணீர் சென்று கொண்டே இருக்கும். கொள்ளிடம் உபரிநீர் செல்லும் ஆறு. எனவே, வெள்ளம் வராமல் இயற்கை ஒத்துழைத்தால் திட்டமிட்டபடி 15 மாதங்களில் அணை கட்டி முடிக்கப்படும். கொள்ளிடம் அணை இடிந்த இடத்தில் இரவு, பகலாக தொழிலாளர்களை கொண்டு தற்காலிக சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story