திருமருகல் அருகே முடிகொண்டானாறு சட்ரஸ் இரும்பு தடுப்பு பலகை உடைந்தது; வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்


திருமருகல் அருகே முடிகொண்டானாறு சட்ரஸ் இரும்பு தடுப்பு பலகை உடைந்தது; வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர்
x
தினத்தந்தி 25 Aug 2018 10:45 PM GMT (Updated: 25 Aug 2018 8:23 PM GMT)

திருமருகல் அருகே முடிகொண்டானாறு சட்ரஸ் இரும்பு தடுப்பு பலகை உடைந்து கடலுக்கு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருமருகல்,

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டும், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்தை நோக்கி வந்த உபரி வெள்ளநீர் கல்லணையை வந்தடைந்தது. அங்கிருந்து கல்லணைக்கால்வாய், காவிரி உள்ளிட்ட ஆறுகளில் பெருமளவில் திறந்து விடப்பட்டது. ஆனால் கிளை ஆறுகள், வாய்க்கால்களை முறையாக தூர்வாரப்படாததால் கடைமடை நோக்கி தண்ணீர் செல்ல முடியாத பரிதாப நிலை ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் அப்பகுதி விவசாயிகளே வாய்க்கால்கள் அடைப்புகளை சரி செய்ததால் ஓரளவு தண்ணீரை விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்ல முடிந்தது. இந்தநிலையில் 45 நாட்களுக்கு பிறகு கடைமடையை காவிரி நீர் எட்டிப்பார்த்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தயாராகினர். இந்தநிலையில் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான திருமருகல் ஒன்றியத்தை காவிரி நீர் தற்போது தான் வந்தடைந்துள்ளது. ஆனால் ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள கடைமடை பகுதிக்கு முடிகொண்டானாறு உள்ளிட்ட 9 ஆறுகளில் உரிய காலத்தில் தண்ணீர் வராமல் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் திருமருகல் அருகே சீயாத்தமங்கை முடிகொண்டானாற்றில் 9 மதகு கொண்ட நீர் ஒழுங்கி சட்ரஸ் 1967-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள இரும்பால் ஆன தடுப்பு பலகை பழுதாகி சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது இந்த ஆற்றில் தண்ணீர் வந்துள்ள நிலையில் மதகில் உள்ள 6-வது சட்ரஸ் இரும்பு தடுப்பு பலகை உடைந்தது. இதனால் ஆற்றில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மதகு சட்ரசில் இரும்பு தடுப்பு பலகை உடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவிரி நீர் கடைமடையை தாமதமாக வந்தடைந்த நிலையிலும் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாரான நிலையில் பெருமளவில் தண்ணீரை சேமித்து பயன்படுத்தும் முடிகொண்டானாறு மதகு நீர் ஒழுங்கி சட்ரசில் இரும்பு தடுப்பு பலகை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கடலில் வீணாவதால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். 

Next Story