தீத்தடுப்பு விதிமுறைகளை மீறிய 380 ஓட்டல்கள் இடித்து அகற்றம்


தீத்தடுப்பு விதிமுறைகளை மீறிய 380 ஓட்டல்கள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 25 Aug 2018 11:15 PM GMT (Updated: 25 Aug 2018 11:15 PM GMT)

மும்பையில் தீத்தடுப்பு விதிமுறைகளை மீறிய 380 ஓட்டல்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரி கூறியுள்ளார்.

மும்பை,

மும்பையில் கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 790 தீ விபத்துகள் நடந்துள்ளன. சராசரியாக தினமும் 13 தீ விபத்துகள் நடக்கின்றன. கடந்த ஆண்டு நடந்த தீ விபத்துகளில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் நடந்த கமலா மில் தீ விபத்தில் 11 பெண்கள் உள்பட 14 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்தை அடுத்து மும்பையில் உள்ள 3 ஆயிரத்து 264 ஓட்டல்கள், வணிக வளாகங்கள், குடோன்களில் தீயணைப்பு துறையினர் இதுவரை சோதனை நடத்தி உள்ளனர்.

இந்த சோதனையில் 1,479 ஓட்டல்களில் உரிய தீத்தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்தது. இதேபோல 17 தியேட்டர்கள், 8 வணிக வளாகங்கள், 59 குடோன்களிலும் தீயணைப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தீயணைப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- தீத்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 380 ஓட்டல்களை இடித்து உள்ளோம். மீதமுள்ள ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் விதிமுறையை பின்பற்ற தவறினால் அந்த ஓட்டல்களும் இடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story