சின்னமனூர் அருகே பரிதாபம்: கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை


சின்னமனூர் அருகே பரிதாபம்: கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2018 11:39 PM GMT (Updated: 25 Aug 2018 11:39 PM GMT)

சின்னமனூர் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சின்னமனூர்,

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். அவருடைய மகள் திவ்யா (வயது 23). இவருக்கும், பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அபிஷேக் (2) என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலமுருகன், உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. கடந்த 17-ந் தேதி அவர் சிகிச்சை பலனின்றி திடீரென இறந்தார். கணவர் இறந்த துக்கத்தில் திவ்யா மனமுடைந்து காணப்பட்டார்.

பின்னர் அவர், தனது மகனை அழைத்து கொண்டு ஓடைபட்டியில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்தார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் இருந்த திவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிகொல்லி மருந்து (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story