சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது


சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது
x
தினத்தந்தி 26 Aug 2018 10:48 PM GMT (Updated: 26 Aug 2018 10:48 PM GMT)

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஊத்துக்கோட்டை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வெறும் 1,259 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

இது மொத்த கொள்ளளவில் 11 சதவீதம் ஆகும். இந்த தண்ணீரை கொண்டு சென்னையில் 2½ மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் வினியோகிக்க முடியும்.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடி. தற்போது 1 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் மின் மோட்டார் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்ட தண்ணீரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தண்ணீர் இல்லாததால் ஏரி மணல் பரப்பாக காணப்படுகிறது.

பூண்டி ஏரியில் 13 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி). ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த 2 மாதத்துக்கு முன்பே சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலும் நீர் இருப்பு குறைந்ததால் பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டது.

நீர்வரத்து இல்லாததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. பேபி கால்வாய் மூலம் 12 கனஅடி தண்ணீர் மட்டும் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. ஏரியில் 8 மில்லியன் கன அடிக்கு நீர்மட்டம் குறைந்தால் பேபி கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்புவதும் சாத்தியப்படாது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 476 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது (மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி). 57 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப் படுகிறது. புழல் ஏரியில் 769 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி). குடிநீர் தேவைக்காக 103 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் இந்த ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வீராணம் ஏரி மட்டுமே சென்னை மக்களின் நம்பிக்கையாக உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. நேற்று வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

கடந்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது கல்குவாரி தண்ணீர் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து நிலத்தடி நீர் எடுத்து வினியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story