அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஆய்வு


அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஆய்வு
x
தினத்தந்தி 28 Aug 2018 11:00 PM GMT (Updated: 28 Aug 2018 8:55 PM GMT)

அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் நேற்று கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஆய்வு செய்தனர். அப்போது மேலும் சில மதகுகளில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜீயபுரம்,

திருச்சி–கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி தண்ணீர் வந்தடைகிறது. முக்கொம்பு மேலணையில் காவிரி ஆறு மூலமாக திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்ட டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.. அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மட்டும் முக்கொம்பு மேலணையில் இருந்து உபரி நீராக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது. கொள்ளிடம் அணையில் தென்பகுதியில் 45 மதகுகள் உள்ளன. வடபகுதி 10 மதகுகளை கொண்டதாகும். ஒவ்வொரு மதகின் நீளம் 12 மீட்டர்.

 கடந்த 22–ந் தேதி இரவு முக்கொம்பு மேலணை பகுதியில் கொள்ளிடம் பாலத்துடன் கூடிய அணை இடிந்து விழுந்தது. இதனால், கொள்ளிடம் தென்பகுதியில் உள்ள 6 முதல் 14 வரையிலான 9 மதகுகள் உடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. சேதமடைந்த பகுதியின் மொத்த நீளம் 108 மீட்டர் ஆகும்.


கொள்ளிடம் அணை இடிந்து விழுந்த பகுதியில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் கடந்த 24–ந் தேதி முதல் மேற்கொண்டு வருகிறார்கள். சீரமைப்பு பணிக்காக ரூ.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 2½ லட்சம் மணல் நிரப்பிய சாக்கு மூட்டைகள் தயார் செய்யப்பட்டன. அணையின் மேல்பகுதியில் ஆற்றில் முதலாவது மதகுகள் முதல் 17–வது மதகுகள் வரை, அதாவது 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது.

சீரமைப்பு பணிக்காக எம்.ஆர்.பாளையம், தொட்டியம், திருச்சி, ஜீயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 600–க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் 24 மணி நேரமும் இரவு, பகலாக பணிகளை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மழை பெய்ததால் தற்காலிக சீரமைப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டன.இதனால் தொழிலாளர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்றனர். ஆனால், நேற்று காலை முதல் மீண்டும் சீரமைப்பு பணி தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.


அணையில் உள்ள இடிந்த 9 மதகுகள் போக, மீதமுள்ள 36 மதகுகளும் நல்ல நிலையில் உள்ளதா? எனவும், கொள்ளிடம் அணையின் ஸ்திரத்தன்மை குறித்தும் ஆய்வு செய்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர். அதற்காக, அணையின் மேல் பகுதியில் தண்ணீருக்கு அடியில் சென்று அணையில் இதர மதகுகளில் விரிசல் உள்ளதா? என்றும், அணையின் பிளாட்பாரம் விரிசல் விடாமல் இருக்கிறதா? என கண்டறிவதற்காக ஆழ்கடலில் மூழ்கி நீச்சல் பயிற்சி அனுபவம் உள்ள ‘ஹைடெக் சிவில் என்ஜினீயர்ஸ் ஏஜென்சியினர் தூத்துக்குடியில் இருந்து நேற்று வரவழைக்கப்பட்டனர். அந்த ஏஜென்சியின் கீழ் பணியாற்றக்கூடிய, அதாவது ஆழ்கடலில் மூழ்கி முத்து மற்றும் சிப்பிகளை சேகரிக்கும் அனுபவம் உள்ள நீச்சல் பயிற்சியாளர்கள் பாலு(வயது56), சிவா(40), சந்தனகுமார்(40) ஆகிய 3 பேர் முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு வந்தனர்.


 அவர்கள் அணையின் வடபகுதியில் இருந்து, அதாவது 45–வது மதகு பகுதியில் இருந்து ஒவ்வொரு மதகாக 1–வது மதகுவரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரில் மூழ்கி ஆய்வு செய்தனர். கொள்ளிடம் அணையில் தூண்கள், மதகுகள் மற்றும் அணையின் ஸ்திரத்தன்மை குறித்து உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தண்ணீரில் மூழ்கி ஆய்வு நடத்தினர்.

அப்போது, கொள்ளிடம் அணையில் உள்ள எஞ்சிய மதகுகள் சிலவற்றிலும் விரிசல் ஏற்பட்டு இருப்பதும், அணையின் அடித்தள பிளாட்பாரத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, மேற்கொண்டு கொள்ளிடம் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட நேர்ந்தால் எப்போது வேண்டுமானாலும் எஞ்சிய அணைப்பகுதி இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.


முன்னதாக இந்த பணியினை திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரப்பர் படகில் கொள்ளிடம் ஆற்றுக்குள் சென்று ஆய்வு செய்தனர்.

Next Story