அ.தி.மு.க.வுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்


அ.தி.மு.க.வுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை - முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்
x
தினத்தந்தி 31 Aug 2018 11:15 PM GMT (Updated: 31 Aug 2018 2:05 PM GMT)

அ.தி.மு.க.வுக்கும், டி.டி.வி. தினகரனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

தேவகோட்டை,

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தேவகோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இரட்டை இலை முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். கொடுத்த சின்னம். தேர்தலில் திராவிட கட்சிகளான தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையேதான் போட்டி. தமிழகத்தில் வேறு எந்த கட்சிக்கும் இடமில்லை. இன்று வந்தவர்கள் எல்லாம் கட்சியை தொடங்கி நடத்துகிறார்கள். அந்த கட்சிகள் எல்லாம் விரைவில் காணாமல் போகும்.

டி.டி.வி. தினகரனுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர். ஒரு கட்சியை வைத்துக்கொண்டு அந்த கட்சி என்ற பெயரில் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கம்பெனியை நடத்தி வருகிறார்.

18 எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பதற்காக அவர்கள் டி.டி.வி. தினகரன் பக்கம் சென்றுள்ளனர். அ.தி.மு.க. எத்தனையே முறை ஆட்சியை பறிகொடுத்துள்ளது. அதற்காக கட்சி அழிந்துவிடவில்லை. ஆட்சி என்பது எங்களுக்கு ஒரு அங்கம் தான். மத்திய அரசிற்கு நாங்கள் ஒன்றும் தலையாட்ட மாட்டோம் என்று முதல்–அமைச்சரே கூறி விட்டார். பெரியார் சிந்தனை தான் அ.தி.மு.க.விற்கு உண்டு. அ.தி.மு.க.வினர் யாருக்கும், எந்த குடும்பத்திற்கும் அடிமையில்லை. அ.தி.மு.க. பொதுக்குழுவில் தந்தை பெரியாரின் சிந்தனைகளை எல்லாம் பேசியுள்ளோம். பாரதீய ஜனதா கட்சி விவாகாரத்தில் தி.மு.க. இரட்டை நிலையை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story