நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்: பூம்புகார் கடலில் மூழ்கி என்ஜினீயர்கள் 2 பேர் பலி


நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்: பூம்புகார் கடலில் மூழ்கி என்ஜினீயர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 Sep 2018 11:00 PM GMT (Updated: 2 Sep 2018 6:35 PM GMT)

பூம்புகார் கடலில் மூழ்கி கும்பகோணத்தை சேர்ந்த என்ஜினீயர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவெண்காடு,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் பாலாஜி (வயது23). கும்பகோணம் பிரம்மன் கோவில் மருத்துவர் தெருவை சேர்ந்தவர் பூபாலன் மகன் ஜெயப்பிரகாஷ் (23). என்ஜினீயர்களான பாலாஜி, ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் தங்களது நண்பர்களுடன் நாகை மாவட்டம் பூம்புகாருக்கு நேற்று காலை சென்றனர். பின்னர் அவர்கள் தங்களது நண்பர்களுடன் பூம்புகார் கடலில் இறங்கி குளித்தனர்.

அப்போது கடலில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கடலில் நீந்தி சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் பாலாஜியையும், ஜெயப்பிரகாசையும் காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவர்கள் கரைக்கு ஓடிவந்து கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பூம்புகார் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் மூழ்கி மாயமான 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் உடல்கள் நேற்று மாலை அதே பகுதியில் கரை ஒதுங்கியது. இதைத்தொடர்ந்து நாகை கடலோர காவல்படை போலீசார் விரைந்து சென்று பாலாஜி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகை கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story