காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 2 Sep 2018 9:30 PM GMT (Updated: 2 Sep 2018 8:35 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கோவளம் அடுத்த கரிக்காட்டு குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், இவரது மகன் விக்னேஷ் (வயது24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடலில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வரும் இவர் நேற்று மீன்பிடி வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

திருவிடந்தை என்ற இடத்தில் செல்லும் போது, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று விக்னேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அடுத்த நுகம்மல் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (80). காஞ்சீபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை காரைப்பேட்டை என்ற இடத்தில் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் நடந்து சென்ற நடராஜன் மீது மோதியது. இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story