கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 2 Sep 2018 10:30 PM GMT (Updated: 2 Sep 2018 9:23 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி பழையபேட்டை நரசிம்மசாமி கோவில் தெருவில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து கிருஷ்ணர் சிலை வாகனத்தில் வைத்து மேள தாளத்துடன் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்றது.

அதேபோல் தர்மராஜா கோவிலில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு பூஜை செய்து மேள தாளத்துடன் திருவீதி உலா சென்றது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று கிருஷ்ணர் தேரை இழுத்துச் சென்றனர். மேலும் வழியெங்கும் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஓசூர் கோகுல் நகர் ரங்கோ பண்டித அக்ரஹாரத்தில் உள்ள ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சாமி கோவிலில், சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து வெண்ணெய் காப்பு அலங்காரத்தில், சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி காலை முதலே பக்தர்கள் திரளாக சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், வாணியர் தெருவில் உள்ள வேணுகோபால சாமி ஆகிய கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், ஓசூர், பாகலூர் ரோடு சர்க்கிள் அருகே ராதாகிருஷ்ணர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கெலமங்கலம் சவுடேஸ்வரி நகரில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கிருஷ்ணர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது.

Next Story