வாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்


வாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 2 Sep 2018 10:45 PM GMT (Updated: 2 Sep 2018 9:39 PM GMT)

வாக்குச்சாவடி முகவர்களுடன் இணைந்து வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், என நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவை தலைவர் உடையவர் தலைமை தாங்கினார். இதில் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திசெல்வன் கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தி.மு.க.வின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வது.

நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வருகிற 8 மற்றும் 22-ந் தேதியும், அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 13-ந் தேதியும் என 4 நாட்களில் கிராம ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வைத்து, பொதுமக்களுக்கு வாசித்து காட்டுதல் தொடர்பான கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு, மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரியாக உள்ளதா? என்பதை அறிந்து, விடுபட்ட வாக்காளர்களை வாக்குசாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாக்குசாவடி முகவர்களுடன் இணைந்து, வாக்காளர் சரிபார்ப்பு பணியை மேற்கொள்வது. என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. பழனியம்மாள், மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி, மாநில சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்னுசாமி, விமலா சிவக்குமார், நாமக்கல் நகர பொறுப்பாளர் மணிமாறன், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story