தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் கடற்படை சிறைபிடித்தது


தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் கடற்படை சிறைபிடித்தது
x
தினத்தந்தி 3 Sep 2018 11:45 PM GMT (Updated: 3 Sep 2018 1:11 PM GMT)

துபாயில் மீன்பிடி தொழில் செய்து வந்த தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கீழக்கரை அருகே உள்ள மங்களேஸ்வரி நகர் சேர்ந்த முனியாண்டி மகன் பாலகுமார் (வயது 33), வைரவன்கோவில் பஞ்சவர்ணம் மகன் சதீஸ் (22), களிமண்குண்டு பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் பூமிநாதன் (26), கல்காடு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் அலெக்ஸ் பாண்டியன்(21), தங்கராஜ் மகன் துரைமுருகன்(25), மற்றும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தை சேர்ந்த மில்டன் ஆகியோர் துபாயில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று, கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு ரோந்து வந்த ஈரான் கடற்படையினர், கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது, சிறை பிடித்து சென்றனர். பின்னர் அவர்களை அந்நாட்டிற்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மீனவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசும், மத்திய அரசும் மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களை கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், வெளிநாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்களை தற்போது ஈரான் கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story