சீசன் தொடங்குவதற்கு முன்பே கோடியக்கரை சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்


சீசன் தொடங்குவதற்கு முன்பே கோடியக்கரை சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
x
தினத்தந்தி 3 Sep 2018 10:45 PM GMT (Updated: 3 Sep 2018 5:06 PM GMT)

கோடியக்கரை சரணாலயத்தில் சீசன் தொடங்குவதற்கு முன்பே வெளிநாட்டில் இருந்து பறவைகள் குவிய தொடங்கி உள்ளன.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றன. ஆண்டுதோறும் ஆர்ட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரைப் போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளில் இருந்து நான்கு அடி உயரமுள்ள பூநாரை (பிளமிங்கோ) பறவைகள் அதிக அளவில் வந்து செல்கின்றன. மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, கரண்டிமூக்கு நாரை, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவில் இருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, பர்மாவில் இருந்த வரும் சிறவி வகைகள், இலங்கையில் இருந்து வரும் கடல்காகம், ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து வரும் ஆர்டிக்டேன் (ஆலா) இமாசலப்பிரதேசத்தில் இருந்து வரும் இன்டியன் பிட்டா (காச்சலாத்தி குருவி) உள்ளான் வகை பறவைகள் என 257 வகை பறவைகளும் ஆண்டு தோறும் வந்து செல்கின்றன. இங்கு வரும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்கின்றன.


 இந்த ஆண்டு சீசன் தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் வெளிநாட்டில் இருந்து பறவைகள் கோடியக்கரை சரணாலயத்தில் குவிய தொடங்கி உள்ளன. சென்ற வாரம் பெய்த லேசான மழையால் சீசன் தொடங்குவதற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து பறவைகள் வர தொடங்கியுள்ளன. இதனால் இந்த ஆண்டு சரணாலயத்துக்கு அதிக அளவு பறவைகள் வரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

 கோடியக்கரை சரணாலயத்துக்கு வரும் பறவைகளை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் வெகுதூரம் நடந்து செல்லவேண்டியுள்ளது. எனவே வெகுதூரத்தில் உள்ள பறவைகளை காண இரண்டு கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதில் பெரிய டெலஸ்கோப் நிறுவ வேண்டும். பம்ப் ஹவுஸ் அருகே அடிப்படை வசதியில்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர். அங்கு கழிவறை அமைக்க வேண்டும்.


சரணாலயத்தில் பறவைகளை பார்வையிட சுற்றுலா பயணிகள் செல்வதற்காக அமைக்கப்பட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும் சுற்றுலாத்துறை சார்பில் விடுதி மற்றும் உணவகம் அமைக்க வேண்டும். சரணாலயத்தில் உள்ள முனியப்பன் ஏரியில் தற்போது கருவை மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த ஏரி தூர்வாரப்படாததால் தூர்ந்து காணப்படுகிறது. இந்த ஏரியை ஆழப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story