எங்கள் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு


எங்கள் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 3 Sep 2018 11:30 PM GMT (Updated: 3 Sep 2018 8:03 PM GMT)

எங்கள் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் ஜெயலலிதா பேரவையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. சாத்தூரில் தொடங்கிய இந்த பேரணி காரியாப்பட்டியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து அங்கு அரசின் சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வழங்கினர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:–

அ.தி.மு.க. ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கமாகும். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. தற்போது அ.தி.மு.க.வின் இலக்கு டெல்லியை நோக்கி உள்ளது. இனி மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் யாராலும் ஆட்சியை அமைக்க முடியாது.

ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது மத்திய அரசிற்கு வெறும் ஆதரவை அளித்து வந்தார். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் கூட்டணியில் 10 பேருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று கேட்போம். ஜெயலலிதா பெருந்தன்மையோடு ஆதரவு அளித்து வந்தார். ஆனால் தற்போது அப்படி மத்திய அரசிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஜாதகத்தில் குரு நேரடிப் பார்வையில் உள்ளார். இதனால் அவரது அரசை யாராலும் அசைக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story