ஈரோடு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு மையம், சுகாதார வளாகங்களில் கலெக்டர் கதிரவன் சோதனை


ஈரோடு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளிலும் சத்துணவு மையம், சுகாதார வளாகங்களில் கலெக்டர் கதிரவன் சோதனை
x
தினத்தந்தி 4 Sep 2018 10:45 PM GMT (Updated: 4 Sep 2018 5:12 PM GMT)

ஈரோடு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்ட கலெக்டர் கதிரவன் சத்துணவு மையம், சுகாதார வளாகத்தை பார்வையிட்டார். அப்போது பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பு ஏற்று இருக்கும் கதிரவன் மாவட்டம் முழுவதும் வளர்ச்சித்திட்ட பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டார்.

நேற்று ஈரோடு ஊராட்சி ஒன்றியம் எலவமலை ஊராட்சி அண்ணாநகர் பகுதிக்கு கலெக்டர் கதிரவன் சென்றார். அங்கு பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டு, வீட்டு உரிமையாளர்களிடம் அதுபற்றி விசாரித்தார். அங்கிருந்து மாரப்பம்பாளையம் பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்துக்கு சென்றார். அப்போது பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு சத்துணவு தயாராகிக்கொண்டு இருந்தது. நேராக சத்துணவு மைய சமையல் அறைக்கு சென்ற அவர் சமைத்து வைக்கப்பட்ட உணவினை பார்வையிட்டார். சிறிது உணவை கையில் எடுத்து வாயில் போட்டு ருசித்து பார்த்தார். இதுபோல் அங்கு உள்ள அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டார். மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவை தரமாகவும் சுவையாகவும் கொடுக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

பின்னர் அங்குள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தை கலெக்டர் கதிரவன் பார்வையிட்டார். அதுபோல் அங்குள்ள வீடுகளில் தூய்மை பாரதம் இயக்க திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பிடங்களையும் பார்வையிட்டார்.

வட்டக்கல் மேடு பகுதிக்கு சென்ற அவர் அங்கு உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தை பார்வையிட்டார். அப்போது தண்ணீர் தொட்டி சுகாதாரமற்று இருப்பதை கண்டார். உடனடியாக ஊராட்சி பணியாளர்களை அழைத்த அவர் தண்ணீர் தொட்டியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அங்கிருந்து மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி செல்லிக்காட்டு வலசு பகுதிக்கு சென்றார். அங்கு விவசாய நிலத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மண் கரை அமைக்கும் பணியை பார்வையிட்டார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் பேசிய அவர் முறையாக சம்பளம் வழங்கப்படுகிறதா? என்பதை கேட்டு தெரிந்து கொண்டார்.

பின்னர் உடன் வந்த வட்டார வளர்ச்சி அதிகாரி, சுகாதார பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலெக்டர் கதிரவன் பேசியதாவது:–

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சுகாதார வளாகங்களும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் சுகாதாரம் பேணப்பட வேண்டும். எந்தப்பக்கம் சென்றாலும் சாலையோரங்களில் குப்பைகள் தென்படுகிறது. இவை முழுமையாக அகற்றப்பட வேண்டும். பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க சுகாதார பணியாளர்கள் உதவ வேண்டும். வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இந்த பணிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும். அரசின் வளர்ச்சித்திட்ட பணிகள் துரிதமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள்ளும் விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கதிரவன் பேசினார்.


Next Story