தையல் தொழிலாளி கொலையில் 2 பேர் கைது


தையல் தொழிலாளி கொலையில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Sep 2018 10:00 PM GMT (Updated: 4 Sep 2018 6:12 PM GMT)

தளி அருகே தையல் தொழிலாளி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தேவரபெட்டா பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா என்பவரின் மகன் சசிக்குமார் (வயது 23). தையல் தொழிலாளி. கடந்த 31-ந் தேதி மாலை, தளியில் உள்ள தையல் கடையில் இருந்து மோட்டார்சைக்கிளில் சென்ற சசிக்குமார் மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை தளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மதகொண்டப்பள்ளி - பின்னமங்கலம் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே முட்புதரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அங்கிருந்து சசிக்குமார் உடல் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

தேவரபெட்டா பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை சசிக்குமார் காதலித்து வந்துள்ளார். அதே பெண்ணை, அப்பகுதியை சேர்ந்த மல்லேஷ் (23) என்பவரும் ஒரு தலையாக காதலித்து வந்தார். இதனால் சசிக்குமார் தரப்பினருக்கும், மல்லேஷ் தரப்பிற்கும் இடையே கடந்த ஆண்டு தகராறு ஏற்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்ந்ததால், மல்லேஷ் மற்றும் அவரது நண்பரான தேவரபெட்டாவை சேர்ந்த சவுடப்பா மகன் சசிக்குமார் (23) ஆகியோர் சேர்ந்து, தையல் தொழிலாளி சசிக்குமாரை கொலை செய்தது, போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மல்லேஷ் மற்றும் சசிக்குமாரை தளி போலீசார் நேற்று கைது செய்தனர். 

Next Story