தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை கஞ்சா வியாபாரியிடம் போலீஸ் விசாரணை


தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்திக்கொலை கஞ்சா வியாபாரியிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 5 Sep 2018 9:30 PM GMT (Updated: 5 Sep 2018 10:44 AM GMT)

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து கஞ்சா வியாபாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து கஞ்சா வியாபாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவனஊழியர்

தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). உப்பள தொழிலாளி. பாலமுருகனுக்கு ராஜபாண்டி நகரில் சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு தற்போது குடும்பத்துடன் 3 சென்ட் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் முத்து இருளப்பன் என்ற அஜித்குமார் (21). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

கத்திக்குத்து

நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் கோவில் கொடை விழா நடந்தது. அஜித்குமார் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு ராஜபாண்டி நகரில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அங்கு அதே பகுதியை சேர்ந்த சங்கர் (45), அவருடைய மகன் பாரதி (21) மற்றும் கூட்டாளிகள் சிலர் மது குடித்து கொண்டு இருந்தனர். அப்போது மதுபோதையில் இருந்த அவர்களுக்கும் அஜித்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அஜித்குமார் பாரதியை தாக்கினாராம். அதனால் ஆத்திரம் அடைந்த பாரதி தன்வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்துள்ளார். பின்னர் கத்தியால் குத்தியதில் அஜித்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே பாரதியும், சங்கரும் கூட்டாளிகளுடன் அங்கிருந்து ஓடி தலைமறைவாகி விட்டனர்.

இதனை அறிந்த பாலமுருகன் சம்பவ இடத்துக்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த அஜித்குமாரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிர் இழந்தார்.

கஞ்சா வியாபாரியிடம் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார், சங்கர், பாரதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று சங்கர், போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் கொலைக்கான காரணம் என்ன? கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசில் சிக்கிய சங்கர் பிரபல கஞ்சா வியாபாரி. அவர் மீது தூத்துக்குடி தென்பாகம், தெர்மல்நகர் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து போலீசார் தலைமறைவாக இருக்கும் பாரதி மற்றும் இதில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.


Next Story