பட்டா வழங்குவதாக வதந்தி: கூடலூர் வருவாய் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்


பட்டா வழங்குவதாக வதந்தி: கூடலூர் வருவாய் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 5 Sep 2018 10:15 PM GMT (Updated: 5 Sep 2018 8:38 PM GMT)

பட்டா வழங்குவதாக பரவிய வதந்தியால், கூடலூர் வருவாய் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

கூடலூர்,

கூடலூர் சட்டமன்ற தொகுதியில் 2 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள் மற்றும் 5 ஊராட்சிகள் இருக்கின்றன. இங்கு சட்டப்பிரிவு–17 மற்றும் 53 வகை, பாதுகாக்கப்பட்ட வனம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அதில் சட்டப்பிரிவு–17 மற்றும் சட்டப்பிரிவு–53 வகை நிலங்களில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே அந்த நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்பட உள்ளதாக வதந்தி பரவியது. இதையடுத்து கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி, தேவர்சோலை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த சில நாட்களாக கூடலூர் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் பொதுமக்கள் வந்தனர். மேலும் தங்களது ஆவணங்களுடன் பட்டா கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.

அந்த மனுக்களை வருவாய் துறையினரும் பெற்று கொண்டனர். இதன் காரணமாக பட்டா வழங்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக வேகமாக வதந்தி பரவியது. இதையொட்டி தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் அன்றாட பணிகளுக்கு செல்லாமல் ஆவணங்களுடன் வருவாய் அலுவலகத்தில் குவிந்தனர். அப்போது அரசு நிலத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்படும் என்றும், சட்டப்பிரிவு–17 மற்றும் 53 பிரிவு நிலங்களில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படாது என்றும் வருவாய் துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தேவர்சோலை பேரூராட்சியை சேர்ந்த சிலர் பட்ட கேட்டு கூடலூர் ஆர்.டி.ஓ. முருகையனிடம் முறையிட்டனர்.

இதை கேட்டறிந்த அவர் கூறும்போது, பட்டா வழங்குவது தொடர்பாக எந்த தகவலும் அரசிடம் இருந்து வரவில்லை. தவறான தகவல் பரவி உள்ளது என்று விளக்கம் அளித்தார். மேலும் கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்து விசாரித்த ஆர்.டி.ஓ. முருகையன், தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது என்பதை அந்தந்த பகுதி மக்களிடம் கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் வருத்தத்துடன் கலைந்து சென்றனர்.

முன்னதாக ஆவணங்களில் நகல் எடுக்க பொதுமக்கள் திரண்டதால் ஜெராக்ஸ் கடைகளில் கூட்டம் அலைமோதியது. பின்னர் உண்மை தெரிந்ததும் மக்கள் நடமாட்டம் இன்றி வருவாய் அலுவலகம் வெறிச்சோடியது.


Next Story