அரசு பள்ளி-கல்லூரிகளில் தரமான கல்வி வழங்க தயார் - முதல்மந்திரி குமாரசாமி


அரசு பள்ளி-கல்லூரிகளில் தரமான கல்வி வழங்க தயார் - முதல்மந்திரி குமாரசாமி
x
தினத்தந்தி 5 Sep 2018 11:30 PM GMT (Updated: 5 Sep 2018 8:57 PM GMT)

கர்நாடகத்தில் அரசு பள்ளி-கல்லூரிகளில் தரமான கல்வி வழங்க அரசு தயாராக இருப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி பேசியுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று அரசு உயர்க்கல்வித்துறை, மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் விரிவுரை யாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவை முதல்-மந்திரி குமாரசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசியதாவது:-

அரசு பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி புகட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. அரசு பள்ளி-கல்லூரிகளில் தரமான கல்வி கிடைக்காத காரணத்தால் தான் தனியார் பள்ளி-கல்லூரிகளை நோக்கி பெற்றோர் செல்வதாகவும் கூறுகிறார்கள். இதனை போக்குவதற்கு அரசு தயாராக உள்ளது. தனியார் பள்ளி, கல்லூரிகளில் காணப் படும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரமான கல்வியை அரசு பள்ளி, கல்லூரிகளிலும் வழங்க அரசு தயாராக இருக்கிறது.

விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டதால், மாநில அரசு நிதி சுமையில் சிக்கி தவிப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலும் அரசின் கருவூலத்தில் ரூ.4 ஆயிரம் கோடி நிதி உள்ளது. நிதி நிலைமை சரியாக உள்ளது. இதனால் எல்லா துறைகளையும் நிர்வகிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. கல்வித்துறைக்கு தேவையான நிதி ஆதாரம் அரசிடம் இருக்கிறது. மாநிலத்தில் கூட்டணி அரசு பொறுப்புக்கு வந்தபிறகு 33 சதவீத வரி வருவாய் அதிகரித்துள்ளது. வரிவருவாய் வசூலில் தேசிய அளவில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது.

மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி, கல்லூரிகளில் தரமானகல்வியை வழங்க ஆசிரியர்களும் முன்வர வேண்டும். மாநில அரசின் பல்கலைக்கழகங்களை பன்னாட்டு அளவில் தரமானதாக உயர்த்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மகாராணி கல்லூரியில் தரமான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல, மாநிலத்தில் குறிப்பிட்ட அரசு கல்லூரிகளில் தற்போது வரை தரமான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் தரமான கல்வி அளிக்கும் பள்ளி, கல்லூரிகளும் இருக்கின்றன.

மாநிலத்தில் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. சில பிரச்சினைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப கோளாறுகளால் சம்பளம் வழங்கப்படாமல் இருக்கிறது. அந்த 12 ஆயிரம் ஆசிரியர்களுக்்கும் உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க ஆசிரியர்கள் சிறந்த அறிவுரைகளை அரசுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

விழாவில் உயர் கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவேகவுடா, மாநகராட்சி ேமயர் சம்பத்ராஜ், ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story